தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் கோவை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில், புதிதாக திறக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் அருகே செயல்பட்டு வரும் ஏ.சி. பாரில் சலுகை விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால், அங்கு தினமும் குடிமக்கள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாராபுரம் வடதறை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கிருஷ்ணன் (32), கட்டிடத் தொழிலாளி. திருமணமான இவருக்கு 4 வயது மகளும், 2 வயது மகனும் உள்ளனர்.
நேற்று மாலை புதிதாக திறக்கப்பட்ட பாரில் மது அருந்திய பின்னர், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார் சைக்கிள் மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே, தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் விடுதியில் மற்றொரு சம்பவம் நடைபெற்றது. தாராபுரம் வடதறை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் ஜெயக்குமார் (35), அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் வீட்டிற்குச் சென்றால் குடும்பத்தினர் திட்டுவார்கள் என்ற காரணத்தால், தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை அறையிலிருந்து வெளியே வந்த ஜெயக்குமார், பால்கனியில் இருந்து கீழே எட்டிப் பார்த்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.