கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் மாநகரக் காவல் துறையின் துடியலூர் காவல் நிலையத்துடன் இணைந்து “ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான் – நல்ல வாழ்விற்காக அனைவரும் ஓடுவோம்” என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை சிறப்பாக நடத்தியது.
இந்த மாரத்தான் போட்டி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கியது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகனந்தன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், தலைமைச் செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர்.
கல்லூரி முதல்வர் செளந்தரராஜன் முன்னிலை வகித்தார். இந்த மாரத்தானில் எஸ். என். ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்டின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள், முன்னாள் மாணவர்கள் என மொத்தம் 1,500-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
பங்கேற்பாளர்களுக்காக 3 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. உடல்நலம், உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மாரத்தானில் பங்கேற்ற அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்று உற்சாகத்துடன் ஓடி, நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர், கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் நித்தியானந்தன் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.