நாகப்பட்டினம்,ஜூலை
திருமருகல் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31-ந் தேதி கடைசி நாள் என திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குநர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் 2026-27 ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் நெற்பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. குறுவை பருவத்திற்கு விவசாயிகள் பதிவு செய்ய வருகிற கூஹலை 31-ந் தேதி கடைசி நாளாகும். நடப்பு ஆண்டில் பொது காப்பீட்டு நிறுவனம் இந்த திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், இம்மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் மூலமாகவோ, வங்கிகள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். ஆகவே, விவசாயிகள் இறுதிநேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியத் தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டு கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.465.04- காப்பீட்டு கட்டணமாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் அல்லது விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல், இ ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்யும்போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொண்டு அதற்கான ரசீதை பதிவு செய்த இடத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.