கோவையைச் சேர்ந்த கலைஞர் யூ எம் டி ராஜா விசித்திர அஞ்சலி!

முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் வல்லரசு நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு (ஜூலை 27), கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த யு எம் டி ராஜா என்ற இளைஞர் அவருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சாதா பேனா அல்லது பென்சிலில் வரையாமல், புதுமையான முறையில் கோழி முட்டையின் உட்பகுதியில் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
இதற்காகக் கோழி முட்டையின் ஓட்டில் சிறு துளையிட்டு, சிரிஞ்சு ஊசியைப் பயன்படுத்தி அதிலுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் கருவூன்களை முழுமையாக உறிஞ்சி எடுத்துள்ளார். பின்னர், ஓவியம் வரைவதற்கு ஏற்பச் சிறிய ரீஃபில் பேனாவை வளைத்து, முட்டையின் குறுகலான உட்பகுதியில் சுமார் 4 மணி நேரம் கவனமுடன் செயல்பட்டு அப்துல் கலாமின் உருவப்படத்தை மிகவும் துல்லியமாக வரைந்து முடித்துள்ளார். இந்திய விஞ்ஞானிக்குத் தன் கலைத்திறன் மூலம் செலுத்தியுள்ள இந்த விசித்திர அஞ்சலி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.