கரூர், ஆக. 4:
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை ஆபாசமாக விமர்சித்ததாகக் கூறி, திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் கரூர் மேற்கு மாவட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.பி. மதியழகன் தலைமை வகித்தார். இதில் கரூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், வார்டு, பகுதி, கிளை மற்றும் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தங்களது கண்டனத்தை முழக்கங்கள் எழுப்பி வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அரசியல் தலைவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.