தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருசநாடு, மேகமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலைக்கிராம மக்களை வெளியேற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது இந்த உத்தரவை யடுத்து
அதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மலைக்கிராம மக்களின் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி,கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயையும், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.மனு விபரம்
வருசநாடு மற்றும் மேகமலை மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல தலைமுறைகளாக அங்கேயே வாழ்ந்து வருகின்றனர் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு தொழில்கள் மற்றும் வனப் பகுதியைச் சார்ந்த வாழ்வாதாரமே அவர்களின் வாழ்க்கையின் அடித்தளமாக உள்ளது.
அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும், குழந்தைகளின் கல்வியையும், முதியோரின் வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும்.
எனவே, மலைக்கிராம மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்து சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து, அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த சந்திப்பின்போது சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர்கள் ராஜா அழகணன்,ஹசீப், முத்து, முருகன் ஆகியோர் உடனிருந்தனர்