கோவை கல்வி மாவட்டத்தின் சார்பில், 67-வது குழும அளவிலான தெற்கு குறுமைய தடகள விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது..
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இதில்,பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று ஓட்டப்பந்தயம்,உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளின் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.இதில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளி தொடர்ந்து நான்காவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது.
இதே போல மாணவர்கள் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியும், மாணவிகள் பிரிவில் தொடர்ந்து ஆறாவது முறையாக ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியும் சாம்பியன் கோப்பையை வென்று அசத்தின.வெற்றி பெற்ற அணி வீரர்,வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்..
விளையாட்டுத் துறையில் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற போட்டிகள் மாநில மற்றும் தேசிய அளவிலான வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக உள்ளதாகவும் விழாவில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்…