தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
குண்டடத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆடி மாத அம்மனுக்கு மஞ்சள் நீர் தீர்த்த அபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தீர்த்தக் கலசம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார்.
பொடாரம்பாளையத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் கலசம் ஏந்தி, மேளதாளங்கள் முழங்க, தேசியக் கொடியுடன் ஊர்வலமாக குண்டடம் வந்தனர். அவர்களுடன் நடிகை கஸ்தூரியும் தீர்த்தக் கலசம் ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின்னர் வடுகநாதர் கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மனுக்கு மஞ்சள் நீர் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் கலைவாணி ரஞ்சித்குமார், திலகவதி, கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் மற்றும் நடிகை கஸ்தூரி ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் குண்டடம், கொடுவாய் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து அன்னையர் முன்னணி மாவட்டத் தலைவர் நளினி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.