தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஊதியூர் பகுதியில் உள்ள சிறுகிணறு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சோலார் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கம்பம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
சிறுகிணறு பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்பு பகுதிகளின் அருகே சோலார் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சில கம்பங்கள் வீடுகளின் அருகில் அமைக்கப்படுவதால், பொதுமக்களுக்கு பாதிப்பு மற்றும் இடையூறு ஏற்படும் எனக் கூறி, வீடுகளுக்கு அருகில் கம்பங்கள் அமைக்கக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஊதியூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சோலார் மின் கம்பங்கள் அமைப்பதற்கான உரிய அனுமதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கம்பங்கள் அமைக்கப்படும் இடத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு நகலை பொதுமக்களுக்கு வழங்கி, அதன்படி சோலார் மின் கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சோலார் மின் கம்பங்கள் முறையாக அனுமதி பெற்று அமைக்கப்படுகிறதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால், சிறுகிணறு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.