தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் கடந்த ஆக. 30ம் தேதி, தனது பாட்டி ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். சிறுமிக்கு ஏற்கனவே பழக்கமான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த சந்தோஷ், என்பவரும் திருவிழாவுக்கு வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமியிடம் திருமணம் செய்துக்கொள்ளுவதாக, ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
சிறுமியுடன் சந்தோஷ் செல்லவதை பார்த்த, அடைக்கதேவன் பகுதியை சேர்ந்த அரவிந்த், அவரது நண்பர்களான சோலைக்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் 17,15 வயது இரண்டு சிறுவர்கள் என நான்கு பேரும் பின்தொடர்ந்து சென்று, சந்தோஷை விரட்டிவிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தாய் சிறுமியிடம் விசாரித்த போது, முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.
இதற்கிடையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் நேற்றுமுன்தினம் கிராமத்தில் உள்ள சிலருக்கு தெரியவந்தது.
அவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசில் அளித்த தகவலின் பேரில், சந்தோஷ், அரவிந்த், ஆறுமுகம் மற்றும் இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதையறிந்த சிறுமியின் தாய் சேதுபாவாசத்திரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், கூட்டு பாலியலில் ஈடுபட்ட, ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .