நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சியில் உள்ள பெரியகுளம் தூர்வார அனுமதி வழங்க கோரி அப்பகுதி கிராம மக்கள் திருக்கண்ணபுரம் – ஆண்டிப்பந்தல் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பாடு உடைய பெரிய குளத்தை உடனடியாக தூர்வாரி கரைகள் பலப்படுத்த அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.