குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மமுன்னிலையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் வெளியிட்டார்

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘என்றென்றும் ஜமுக்காளம்’ எனும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பவானி ஜமுக்காளத்தின் சிறப்பு, பாரம்பரியம் மற்றும் தனித்துவத்தை போற்றும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் கலைத்திறனை பாராட்டும் விதமாகவும் ‘ஸ்டுடியோ ஏ’ நிறுவனத்தின் நிறுவனர் அமர் ரமேஷ் எழுதிய “பவானி ஜமுக்காளம்” எனும் புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் பவானி பகுதியை சேர்ந்த பல்வேறு நெசவாளர்கள் பங்கேற்றனர். ஜவுளி துறை திறன் மேம்பாட்டு கழகத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்வப்னா மிஸ்ரா அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று, கே.ஆர்.நாகராஜன் அவர்களிடம் இருந்து முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய ‘ஸ்டுடியோ ஏ’ நிறுவனத்தின் நிறுவனர் அமர் ரமேஷ், ஜமுக்காளம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதாவது செய்யவேண்டும் என தானும் யோசித்து கொண்டிருந்தாதபோது, அதே நேரத்தில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் அவர்களும் அதுபற்றி தன்னிடம் பேசியது, ஜமுக்காளம் பற்றிய ஒரு ஆவண படத்தை எடுக்கவேண்டும் என்ற முடிவை முதலில் எடுக்க உந்துதலாக இருந்ததாக குறிப்பிட்டார்.

இதற்காக பல நாட்கள் பவானியில் தங்கி, ஜமுக்காளம் பற்றி தொழில்நுட்ப அளவிலும், கலை அளவிலும் பல்வேறு கோணங்களிலும் அதை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார். அதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் ஜமுக்காளம் மீதான சாதகமான விவாதங்களை உருவாக்கியது என பகிர்ந்துகொண்டார்.

இப்படிப்பட்ட ஒரு செய்தியை புத்தக வடிவிலும் கொண்டுவரவேண்டும் என முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், இதை உலகில் எங்கிருந்து ஒருவர் படித்தாலும் அவருக்கு ஜமுக்காளம் பற்றி அனைத்தும் தெரியும் படி இது இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என பகிர்ந்துகொண்டார்.

அவரை தொடர்ந்து பேசிய ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், இந்த பெரும் முயற்சியை எடுத்த அமர் மற்றும் அதற்கு பக்கபலமாக இருந்த சங்கர் வானவராயர் ஆகியோருக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்பெல்லாம் இந்தியர்களால் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற முடியாது, இந்தியர்களால்விண்வெளிக்கும், நிலவுக்கும் ராக்கெட் அனுப்ப முடியாது என்றனர், இந்தியர்களால் பலவற்றை செய்யமுடியாது என்ற சொன்னவர்கள் முன்பு “இதோ பாருங்கள், செய்து காட்டுகிறோம்” என சாதனை புரிந்து காட்டியவர்கள் இந்தியர்கள் என்றார்.

“நான் வேஷ்டி எனும் நமது பாரம்பரிய ஆடையை பொதுமக்களிடம் எடுத்து செல்ல வேண்டும், இதனால் நெசவாளர்கள் குடும்பங்களில் நல்ல முன்னேற்றத்தை கொண்டுவரவேண்டும் என எண்ணி, முயற்சியை துவங்கிய போது, இது வெற்றி பெறாது என்றனர். ஆனால் அதை மாற்றி காட்டும் படி இந்த முயற்சியின் முடிவு இருந்தது,” என பகிர்ந்து கொண்டார்.

வேஷ்டி-யை உடுத்துவதை பெரிதும் விரும்பாமல் மேற்கத்திய உடைக்கு சமுதாயம் சென்றபோது, வேஷ்டியை வித்தியாசமாக காட்சிப்படுத்தி அதை மக்கள் விரும்பும் உடையாக ஒரு சாதாரண எஸ்.எஸ்.எல்.சி. படித்த என்னால் முடியும் என்றால், சுப நிகழ்வுகளில் மட்டுமல்லாது நமது கலாச்சாரத்துடனும் உணர்வுடனும் கலந்து உள்ள, ஜமுக்காளத்தை தூக்கி நிறுத்த படித்த இங்குள்ள இளைஞர்களால் முடியாதா? நிச்சயம் முடியும்.
ஜமுக்காளத்தை வெறும் ஜமுக்காளமாக கொண்டு சேர்ப்பதை தவிர அதை கொண்டு மதிப்புகூடப்பட்ட பொருட்களை (உதாரணத்திற்கு ஜமுக்காளம் துணியால் ஆன மாடர்ன் பைகள்) உருவாக்க முயலவேண்டும் என அவர் கூறினார்.

வேஷ்டியை பிரதான பொருளாக விற்கும் ராம்ராஜில், எதிர்காலத்தில் ஜமுக்காளமும் விற்கப்பட முயற்சிகளை எடுக்க விரும்புவதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *