தாராபுரம் செய்தியாளர் பிரபு
வாக்காளர் பட்டியல் திருத்தம்: தாராபுரத்தில் அதிகாரிகள் முன்னிலையில் மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (101) சார்பில், 2026 பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. புதிய நகராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியை தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃ. பிலிக்ஸ் ராஜா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் வருவாய் வட்டாட்சியர் ராமலிங்கம், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், கவுன்சிலர் முருகானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி அலுவலக நுழைவாயிலில் தொடங்கிய பேரணி கரூர் சாலை, அரசு மருத்துவமனை சாலை, தாலுகா அலுவலகம் சாலை, சர்ச் சாலை, அண்ணாசிலை, பூக்கடைக்காரர் தெரு, பெரியகடை வீதி, பொள்ளாச்சி ரோடு, அமராவதி ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணி கோட்டாட்சி அலுவலகத்தில் நிறைவுற்றது.
பின்னர் பொதுமக்களிடம் கருத்து தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் பிலிக்ஸ் ராஜா, 2026 பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் புதிய வாக்காளராக சேர விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பதிவில் உள்ளவர்கள் தங்களின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், இடமாற்றம் செய்தவர்கள் முகவரி மாற்றம், திருமணத்தால் பெயர் மாற்றம், உள்ள பெயர் திருத்தம், இறந்தவர்களின் பெயர் நீக்கம் உள்ளிட்ட தேவையான மாற்றங்களை உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றார். இதற்காக நகராட்சி, ஊராட்சி, வருவாய் அலுவலகங்கள், அங்கன்வாடி மற்றும் வருவாய் மையங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எளிதில் பயன்பெறலாம் என்றும் தெரிவித்தார்.
வாக்காளர் விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்கவும் திருத்தவும் www.nvsp.in தளம் மற்றும் Voter Helpline App பயன்படுத்தலாம் என்றும் கோட்டாட்சியர் பிலிக்ஸ் ராஜா கூறினார். வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் சரியாக உள்ளதற்கு அனைவரும் இந்த சிறப்பு காலக்கட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தாராபுரம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனநாயகப் பொறுப்புடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.