பெரம்பலூர் மாவட்டத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
பெரம்பலூர்.டிச.10. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
“மனித உரிமைகள்” என்ற உள்ளார்ந்த அடிப்படைக் கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலும், மதிப்பு மற்றும் உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கிலும் “சர்வதேச மனித உரிமைகள் நாள்” ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர் “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்த ஒரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன்.
மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.” என்ற மனித உரிமைகள் தின உறுதிமொழியினை வாசிக்க அவரைத் தொடர்ந்து அனைத்து துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்