பெரம்பலூர்.டிச.16. பெரம்பலூர் கிளை சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவைகள் தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன் , மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா, ஆகியோர் தலைமையிலான குழுவினர் (board of visitors for perambalur sub jail) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை இயக்குநர் ஜெனரல் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் கிளை சிறையில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையிலான ஆய்வுக்குழு நியமிக்க்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி , முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா, ஆகியோர் பெரம்பலூர் கிளைச் சிறையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கிளைச்சிறையில் உள்ள கைதிகளிடம் உரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் தரமாக உள்ளதாக என கேட்டறிந்தனர். மேலும், மனநல ஆலோசனை வழங்க மருத்துவர்கள் முறையாக வருகை தருகின்றார்களா எனவும் கேட்டறிந்தனர். மேலும், சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினரிடம் உரையாட காணொளி அறை (வீடியோ கான்பிரன்சிங்) உள்ளதை பயன்படுத்துகின்றீர்களா எனவும் கேட்டறிந்தனர்.
பின்னர், கிளைச் சிறையில் உள்ள விசாரணை சிறைவாசிகள், தண்டனை சிறைவாசிகள் மற்றும் காவலர்கள், சமையலர், பணியாளர்கள் உள்ளிட்டோர் விவரங்களை பராமரிக்கும் பதிவேடுகளையும், ஆவண பாதுகாப்பு அறைகளையும், சிறைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் , முதன்மை மாவட்ட நீதிபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சிறைக் கைதிகளுக்கு உணவு சமைக்கும் கூடத்தை பார்வையிட்டு, சமைக்கப்பட்டிருந்த உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தார்கள். உணவு வகைகள் அரசு அட்டவணைப்படி வழங்கப்படுகிறதா, தரமாக உள்ளதா என்பது குறித்தும் சிறையில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது ஆய்வுக்குழு உறுப்பினர்களான மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் அனுசுயா, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கண்ணன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் குணசேகரன், மனநல மருத்துவ அலுவலர் அசோக் உள்ளிட்ட அலுவலர்களும், கிளைச் சிறை கண்காணிப்பாளர் சுந்தராஜன், சிறை முதல் நிலை காவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.