திருவாரூர் அருகே நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்.. 12 கோடி மதிப்பிலான நூல்கள்.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள சோழா மத்திய நூலகம் சார்பில் 5-வது புத்தக கண்காட்சி (17.12.2025) கோலாகலமாக பன்னோக்கு அரங்கில் தொடங்கியது பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
சோழா மத்திய நூலக நூலகர் முனைவர் பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டு சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சி டிசம்பர் 17 முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
துணைவேந்தரின் ஒப்புதலோடு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பரிந்துரைக்கும் சுமார் 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான நூல்களை நூலகத்திற்காக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேராசிரியர்கள் மற்றும் மாணாக்கர் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை சலுகை விலையில் வாங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் இரா. திருமுருகன் நிதி அதிகாரி கிரிதரன் தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நூலகர் முனைவர் பரமேஸ்வரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இணை நூலகர் மட்டுறும் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் தனவந்தன் நன்றி கூறினார். மத்திய நூலகத்தின் பணியாளர்களும் புத்தக கண்காட்சியின் ஏற்பாட்டுக்கு பங்களித்தனர் புத்தக கண்காட்சியில் திரளான பேராசிரியர்கள் மற்றும் மாணாக்கர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு புத்தகங்களை பார்வையிட்டனர்.