தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றதைத் தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் படி மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் மீறுசமுத்திரம் கண்மாயின் கரையை பலப்படுத்துதல், நடைபாதை, பூங்கா, தடுப்புச் சுவர், படகுகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில், அலுவலகக் கட்டடம், பாதுகாவலர் அறை, நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, சாய்வுதளம், அமரும் மேடை, உணவுக்கூடம் மற்றும் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், ஆகாய தாமரை அகற்றுதல், மரங்கள் நடுதல், பறவைகள் தீவு அமைத்தல், கண்காணிப்பு புகைப்படக் கருவி அமைத்தல், பூங்கா மின் வசதிகள் அமைத்தல், படகுகள் மற்றும் பூங்கா விளையாட்டு கருவிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், செயற்பொறியாளர் (மஞ்சாறு வடிநிலக்கோட்டம்) .சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.