பா. வடிவேல்
அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பில் 2026 ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுவதைக் முன்னிட்டு ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பதின் அவசியம், பாதுகாப்பான பயண முறைகள், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம், பாதசாரிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், போக்குவரத்து சிக்னல்களை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
விபத்துகளைத் தவிர்க்க மாணவர்கள் சிறு வயதிலிருந்தே சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சுமார் 550-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்குபெற்ற இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு. எஸ். மதிவாணன் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார், உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கியநாதன், ஆசிரியர் இளஞ்செழியன் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
மேலும், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரஜினி, காவல் ஆளினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நேரடி விளக்கங்கள் வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வை ஏற்படுத்தியதாக அனைவராலும் பாராட்டப்பட்டது.