செங்குன்றம் செய்தியாளர்
100 நாள் வேலையை பாஜக அரசு கொன்று விட்டது. 125 நாட்கள் வேலை என்பது மிகப்பெரிய பொய். ஐடி, சிபிஐ, ஈடி வரிசையில் சென்சார் என அரசியல் காரணங்களுக்காக பாஜக அரசு அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தி வருகிறது. திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் பேட்டி.
சென்னை புழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு தலைமையில் 10,000 பேருக்கு பொது மக்களுக்கு சேலை வழங்கும் பணிகளை திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகாந்த் செந்திலிடம் அதிமுக வலியுறுத்தியதால் 125 நாட்களாக 100நாள் வேலை அதிகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கருத்து குறித்த கேள்விக்கு, தற்போதைய சட்டத்தின்படி அனைவருக்கும் 100நாள் வேலை என்பதே முழுமையாக கிடைப்பதில்லை என்றும், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக சரிவர நிதி ஒதுக்காததால் 100 நாள் வேலை என்பது 30நாள் கூட கிடைக்காத நிலை உள்ளது எனவும், 125 நாட்கள் வேலை என்பது மிகப்பெரிய பொய் என தெரிவித்தார். 90% என இருந்த மத்திய அரசு நிதியை 60% என குறைத்து விட்டார்கள் எனவும், முந்தைய காலங்களை போல மக்களை நிலக்கிழார்கள் காலடியின் கீழ் இருக்க வேண்டும் என பாஜக எண்ணுகிறது என சாடினார். 100 நாள் வேலையை முழுமையாக கொன்று விட்டது பாஜக அரசு எனவும், 100 நாள் வேலை மூலம் கிராம ஊராட்சி தலைவர்கள் தேவையான பணிகளை செய்து வந்த நிலையில், தற்போது அதுவும் அழியும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். ஐடி, சிபிஐ, ஈடி வரிசையில் சென்சார் என அரசியல் காரணங்களுக்காக அனைத்து அமைப்புகளையும் ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது என்றும் மக்களுக்கு எதிராகவும், அனைத்தையும் பாஜக பயன்படுத்தும் என்றார். பாஜகவின் இது போன்ற பாசிச செயல்களால் ஜனநாயகம் அழிந்து வருகிறது என்றும் சாடினார். ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக ஏதும் கூறவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியில் கருத்து சுதந்திரம் உள்ளதால், சிலர் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்ததாக கூறினார்.
இந்த நிகழ்வில் 31 வது மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் நாடாளுமன்ற பொறுப்பாளர் ஏ ஜி சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ், திருவள்ளூர் மாவட்ட துணைத் தலைவர் பாபு உட்பட சர்க்கிள் தலைவர் வெங்கடேசன் புழல் குபேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.