நாமக்கல்.
ஜனவரி 13.
தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றததால் அதன் எதிரொலி. நடப்பாடு அறுவடை திருநாள் தமிழக விவசாயிகளுக்கு இனிப்பான பொங்கல் இல்லாமல் கசப்பான பொங்கலாக உள்ளது என தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வேதனை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி நடப்பாண்டு அறுவடை திருநாள் தைப்பொங்கல் குறித்து வேதனை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி தமிழக விவசாயிகளுக்கு தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் இதுவரையிலும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் செயல்படுத்தவில்லை. தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றிற்கு 4000 ரூபாய் வழங்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெறும் வகையில் நீர் வேளாண்மை திட்டத்தின் வாயிலாக நிலத்தடி நீர் செரிவூட்டும் வகையில் 10,000 கோடியில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும். தென்னை விவசாயிகளின் நலன் கருதி தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக சந்தை படுத்தப்படும்.
தமிழக விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு விளை நிலத்தையும் அரசின் பயன்பாட்டிற்காக எடுக்க மாட்டோம். சேலத்தில் இருந்து சென்னை செல்ல மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ள நெடுஞ்சாலை அமைச்சகத்திலும் எட்டு வழி சாலை அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறிவிட்டு திமுக கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் கூட தமிழக விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு இன்று வரை நிறைவேற்றி தரவில்லை என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து தனது அறிக்கையில் நடப்பாண்டு தைத்திங்கள் அறுவடை திருநாள் பொங்கல் பண்டிகை இனிப்பான பொங்கலாக இல்லாமல் கசப்பான பொங்கல் பண்டிகையாக உள்ளது என தமிழக விவசாயிகள் கருதுகின்றனர். மேலும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திமுக அரசுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக நினைவுபடுத்திக் கொள்வதாக வேலுச்சாமி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.