கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 540 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு, ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அமைந்த “முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை” என்ற திட்டத்தின் கீழ் தலா ரூ.1 இலட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகைக்கான ஆணை 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.48,800 மதிப்பீட்டிலான 5 காதொலி கருவிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு மருத்துவ செலவிற்கு ரூ.16.000 மதிப்பீட்டிலான காசோலை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டம், முட்டம் கிராமத்தை சேர்ந்த திரு.சின்னதுரை என்பவர் குவைத் நாட்டில் தீ விபத்தில் கடந்த 12.06.2024 அன்று இறந்ததற்காக அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து சட்டபூர்வமாக வரப்பெற்ற ரூ.12,64,050 இழப்பீட்டுத் தொகையினை அவரது சட்டபூர்வ வாரிசுதாரர்களான திருமதி சரோஜா (தாயார்) மற்றும் திருமதி சத்யா (மனைவி) என்பவர்களுக்கு தலா ரூ.6,32,025 இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
மேலும், பணிகாலத்தில் இறந்த வருவாய்த் துறையினை சேர்ந்த 5 அரசு அலுவலர்கள் மற்றும் பிற துறையினை சேர்ந்த 11 அரசு அலுவலர்களின் வாரிசுதாரர்கள் 16 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இன்றைய தினம் வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.