தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்தாய்வு கூட்டம்
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய மின் வசதி இருக்க வேண்டும் எனவும், சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தகரத்தினால் கூரை அமைக்கப்பட வேண்டும் எனவும், சிலைகள் அமைந்துள்ள இடத்தில் தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் கேமராக்கள் வைத்திருக்க வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தில் அரசியல் மற்றும் ஜாதியை குறிக்கும் வகையில் எந்தவித பிளக்ஸ் போர்டுகளும் அமைக்க கூடாது, விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தில் தன்னார்வலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், ஊர்வலத்தின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.