வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்: காங்கயம் நகராட்சி நடவடிக்கை.
காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 4 கடைகளை செவ்வாய்க்கிழமை நகராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைத்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகம், தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் 180 கடைகளுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் 4 கடைகள் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தப்படாமல் செயல்பட்டு வந்தன. மேற்கண்ட கடைகளுக்கு உரிய வாடகை செலுத்த வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, வாடகை செலுத்த வலியுறுத்தி சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், வாடகை செலுத்தாத பேருந்து நிலையம் மற்றும் இதன் அருகே உள்ள தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 கடைகளை நகராட்சி வருவாய் ஆய்வாளர் வருண் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் கடைகளைப் பூட்டி சீல் வைத்து, நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், கடை வாடகையை உரிய நேரத்தில் செலுத்துமாறு நகராட்சி ஆணையர் கி.பால்ராஜ் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.