குண்டத்தை அடுத்த ஏரகம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு நல்லமங்கை உடனமர் நாகேஸ்வரர் திருக்கோவிலின் 2-ம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகள் முன்னதாக காலை 7.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கின. தொடர்ந்து ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக ஆரம்பமானது.
காலை 8.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் மகா யாக வேள்வி பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நாகேஸ்வரர், நல்லமங்கை அம்மன், ஸ்ரீ காலபைரவர், துர்க்கை அம்மன், ஸ்ரீ விநாயகர், முருகன், வள்ளி–தெய்வானை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் கலச ஆவாஹனம் செய்து, 108 மூலிகை திரவியங்களுடன் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆறு வகை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார 48கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக, விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா பக்தர்களிடையே பெரும் பக்தி உணர்வையும் ஆன்மிக மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.