தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் குளிர் வாட்டி வந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது.
இன்று காலை முதல் சாரல் மழை அதிகரித்து மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக வாழவாய்க்கால், சேந்தமங்கலம், விளமல், அடியக்கமங்கலம், கங்களாஞ்சேரி, கண்கொடுத்தவணிதம், கமலாபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.