தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப்ராஜ்.
தஞ்சாவூர்,
தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஆயிரம் கனவுகளின் விமானம்” என்ற பிரமாண்டமான விண்வெளி சார்ந்த நிகழ்ச்சியை இந்தியா புத்தக சாதனை மற்றும் ஆசியா புத்தக சாதனை முயற்சியாக வெற்றிகரமாக நடத்தியது. இளம் தலைமுறையினரிடையே விண்வெளி, புதுமை மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 27 பள்ளிகள் மற்றும் 2 பலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து 1932 மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இது கல்வி மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக ஆரா ஏரோஸ்பேஸ் குழுவினரால் தளஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் பங்கேற்பாளர்களின் பதிவு மற்றும் கைமுறையில் கிளைடர் (Glider) உருவாக்கும் பயிற்சி நடைபெற்றது. மாணவர்கள் குழுவாக இணைந்து தங்களது படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு மற்றும் குழுப்பணி திறன்களை வெளிப்படுத்தி கைமுறை கிளைடர்களை வடிவமைத்து தயாரித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டிரோன் விமானக் காட்சி நிகழ்ச்சி சிறப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் இராமச்சந்திரன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பெங்களூரு ஓய்வு பெற்ற விஞ்ஞானி சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு விண்வெளியில் ஆராய்ச்சியின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.பல்கலைக்கழக செயற்குழு உறுப்பினர்
வீ.அன்புராஜ் கிளைடர் பறப்பைத் தொடங்கி வைத்தார்.
இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனை நிறுவனத்தின் தீர்ப்பாளரான எஸ்.சகாயராஜ் சாதனை அறிவிப்பை வெளியிட்டார் முடிவில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனவத்தின், விண்வெளி பொறியியல் துறைத் தலைவர் கார்த்திக் சுப்ரமணியன் நன்றி கூறினார்.