புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 6வது கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ஐந்து மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, புதுச்சேரி மக்கள் மாநில சுயாட்சியை விரும்புகின்றனர். புதுச்சேரி முதலமைச்சர் மாநில அந்தஸ்துக்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக தெரிவித்திருந்தார்.
ஆனால் முதல்வரின் முதல் கோரிக்கையே தோல்வி அடைந்துள்ளது. ஒன்றிய அரசு புதுச்சேரிக்கான கடனை தள்ளுபடி செய்யாததால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் வளர்ச்சி சீர்குலைந்து, கடன் சுமை அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 19 கார்ப்பரேஷன்கள் மூடப்பட்டுள்ளன. அதனை திறப்பதற்கு ஒன்றிய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை.
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் கேட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினந்தோறும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இருக்கும் சிறிது காலத்தில் முதல்வர் அவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் அதிகளவில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு, சலுகைகள் அறிவிக்க வேண்டும். இரட்டை இன்ஜின் ஆட்சியில் புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை. மாநில அந்தஸ்துகாக முதல்வர் ரங்கசாமி தேர்தலை புறக்கணிக்க தயார் என கூறியுள்ளார். திமுகவும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் தேர்தலை புறக்கணிக்க தயார். மாநில அந்தஸ்து பெற்ற பிறகு தேர்தலை சந்திக்கலாம். இவ்வாறு பேசினார்.