தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேட்டுக்கடை அருகே மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ். கருணாகரன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை என்றும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் வகையில் செயல்படுகிறது எனக் கூறி அதிமுகவையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
“தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய அரசை கண்டிக்கிறோம்”, “மாநில உரிமைகளை பாதுகாப்போம்” போன்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு கட்சி பிரதிநிதிகள் உரையாற்றி, தமிழ்நாட்டின் நலன்களை காக்க ஒன்றிணைந்து போராடுவோம் என உறுதியளித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.