சி.கே.நாயுடு கிரிக்கெட்டி போட்டியில் புதுச்சேரி அணி அசாம் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
புதுச்சேரி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 4 நாட்கள் சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி அசாம் மாநிலத்தில் தொடங்கிய போட்டியில் புதுச்சேரி அணியும், அசாம் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த அசாம் அணி புதுச்சேரி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். முதல் இன்னிங்சில் 113 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டது. புதுச்சேரி வீரர் சந்தோஷ் 5 விக்கெட்டுகளை அள்ளினார். நிதின் பிரணவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து ஆடிய புதுச்சேரி அணி 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
புதுச்சேரி அணி தரப்பில் அதிகபட்சமாக சித்தார்த் நாயுடு 75 ரன், ஜூலியன் ஜேக்கப் 50 ரன் எடுத்தனர். 111 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸ் ஆடிய அசாம் 268 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணியின் சித்தாக் சிங் 4, நிதின் பிரணவ், ஆகாஷ், புகழேந்தி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பின்னர் 158 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய புதுச்சேரி அணி 4 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பராஸ் ரத்ன பார்க்கே 67 ரன்களும், நிதின் பிரணவ் 50 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த போட்டியில் நிதின் பிரணவ் அபாரமாக விளையாடி 2 இன்னிங்சில் 5 விக்கெட் மற்றும் 50 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.