திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியேற்ற அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு தாராபுரத்தில் பாராட்டு விழா – மேற்கு மண்டலத்தை வலுப்படுத்த உறுதிமொழி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைச் சாலையில் உள்ள ரோட்டரி கிளப் அரங்கில், திமுக தாராபுரம் நகரம் மற்றும் ஒன்றிய கழகத்தின் சார்பில், புதிதாக திமுக கழக துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு பாராட்டு விழா, நடைபெற்றது.

அதேபோல், திமுக திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நான்காம் மண்டலத் தலைவர் இ.பத்மநாபன் நியமிக்கப்பட்டதையொட்டி அவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த விழாவில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் இ.கே.பிரகாஷ், நகரச் செயலாளர் முருகானந்தம், ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், நகர மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பாராட்டு விழாவில் பேசிய அமைச்சர் கயல்விழி அவர்கள்,
நீண்ட நாட்களாக திமுகவில் சிறப்பாக பணியாற்றி, கட்சிக்கும் மக்களுக்கும் தொண்டாற்றி வரும் அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியிருப்பது பெருமைக்குரியது. அவரது பணிகள் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்,” என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் இ.பத்மநாபன் அவர்கள்,

முதலமைச்சரும் துணை முதல்வரும் எனக்குக் கட்சிப் பொறுப்பு வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிரமாக பணியாற்றுவேன்,” என கூறினார்.

பின்னர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் இ.கே.பிரகாஷ் அவர்கள் உரையாற்றியபோது,அமைச்சர் சாமிநாதன் பதவிக்காக ஆசைப்படுபவர் அல்ல; மாறாக பதவியே அவரைத் தேடி வந்துள்ளது. அவரின் மக்கள் சேவையைப் பார்த்தே நான் அரசியலில் வளர்ந்தேன். அவரைப் போலவே நானும் மக்களுக்காக உழைக்கிறேன்,” எனக் கூறினார்.

இறுதியாக, கழக துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் உரையாற்றுகையில்,பாஜக அரசு தமிழ்நாட்டில் எப்போதும் கால் பதிக்க முடியாது. மேற்கு மண்டலத்தின் 60 தொகுதிகளை வலுப்படுத்தும் பணியில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டியது அவசியம். பூத் வார்டு கமிட்டி நிலைகளில் பல்வேறு செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

விழா நிறைவில், உடுமலைச் சாலை பெரியார் தீவுத் திடலில் உள்ள பெரியார் சிலைக்கும், பழைய நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா திருவருட்ச் சிலைக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் தாராபுரம், குண்டடம், மூலனூர், பேரூர் உள்ளிட்ட நகர மற்றும் ஒன்றிய திமுக செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *