காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 14 ஆடுகள் உயிரிழப்பு.!
காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்த இருவேறு சம்பவங்களில் மொத்தம் 14 ஆடுகள் உயிரிழந்தன. 11 ஆடுகள் காயமடைந்தன.
காங்கயம் தாலுகா, வீரணம்பாளையம் அருகே பட்டக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சேதுராமசாமி (67). இவர் வீட்டுக்கு அருகே, ஆட்டுப்பட்டி அமைத்து சுமார் 120 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து, ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார்.
வியாழக்கிழமை காலை வந்து பார்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் 9 ஆடுகள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, இறந்து கிடந்துள்ளது. மேலும், 9 ஆடுகள் காயமடைந்த நிலையில் காணப்பட்டது. இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்து 9 ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த கால்நடைத்துறையினர் இறந்த ஆடுகளை உடற்கூறாய்வு மேற்கொண்டு, காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதே போல, காங்கயம் தாலுகா, பாப்பினி அருகே உத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (47) என்பவரது ஆட்டுப் பட்டிக்குள் புதன்கிழமை நள்ளிரவில் வெறிநாய்கள் புகுந்து அங்கிருந்த 5 ஆடுகளை கடித்துக் குதறியதில், 5 ஆடுகள் உயிரிழந்தன. 2 ஆடுகள் படுகாயமடைந்தன.