ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப சத்து மிகுந்த வெண்டை சாகுபடி செய்து 45- வது நாள் முதல் 100 நாட்கள் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மகசூல் பெறலாம் எனத் தோட்டக்கலைத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
வெண்டையில் சாதாரண ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களும் சாகுபடிக்கு ஏற்றவை. விதையை பொருத்த வரை சாதாரண ரகங்களுக்கு ஏக்கருக்கு 3 கிலோவும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஏக்கருக்கு 1.5 கிலோவும் தேவை. மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழ உரமிட வேண்டும். வெண்டை விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கிலோவுக்கு 2 கிராம் கார்பண்டசிம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர வைக்க வேண்டும். 45 செ. மீ.. இடைவெளியில் பார் அமைத்து 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் வீதம் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். பத்து நாள்களுக்கு பின் நன்றாக உள்ள செடியை வைத்து கொண்டு மற்றதைக் களைத்து விட வேண்டும்.
விதைத்த பின் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது நல்லது. அடியுரமாக ஏக்கருக்கு 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய 27 கிலோ முரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
விதைத்த 30 நாள்கள் கழித்து 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் 800 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, 20 கிலோ நன்கு மக்கிய தொழ உயரத்துடன் கலந்து மண்ணில் நேரடியாக இட்டு, தழை மற்றும் மணிச்சத்து உரத்தேவையைக் குறைத்துக் கொள்ளலாம்.
ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா கலந்து பெறப்பட்ட ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30- ம் நாள் முதல் பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 17 கிராம் முரேட் ஆப் பொட்டாஷ் கலந்து பெறப்பட்ட ஒரு சத கரைசலை விதைத்த 30, 45 மற்றும் 60- ம் நாள்களில் என மூன்று முறை தெளிக்க வேண்டும்.
இவ்வாறு இலைவழி ஊட்டம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம். நோயின் அறிகுறி தென்பட்டவுடனும், பின் 15 நாள்கள் கழித்தும் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளிக்க வேண்டும்.
விதைத்த 45- ம் நாள் முதல் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். 90 முதல் 100 நாள்களில் ஏக்கருக்கு ஆறு டன் வரை மகசூல் எடுக்கலாம். எனவே, வெண்டை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இந்த ஆடிப்பட்டத்தில் முறையான சாகுபடி முறைகளை கடைப்பிடித்து நிறைவான மகசூல் பெற்று பயனடையலாம்.