கோவை புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர் பங்கேற்கும் 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின், உலக தொழில் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். சிறு குறு தொழில்கள் வளர்ச்சிக்கு தமிழக அரசு சிறந்த அரசு என அமைச்சர் அன்பரசன் பெயர் வாங்கி கொடுத்துள்ளார் என புகழாரம் சூட்டினார்.

இதுபோன்ற தொழில் மாநாடுகள் தமிழக வளர்ச்சி மட்டுமல்லாமல் இந்திய வளர்ச்சிக்கும் ஏதுவாவதுடன், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார். அமைதியான சட்டஒழுங்கு இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம், அதனை தேடித்தான் தொழில்துறையினர் வருகிறார்கள் என பெருமிதம் தெரிவித்தார். கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக பொறுப்பேற்ற காலங்களில், எண்ணற்ற தொழில் வளங்களை மேம்படுத்தி உள்ளதுடன், அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் தொழில்களை திமுக அரசு ஈர்த்துள்ளது என்றார்.வரும் காலங்களில் 1.1 ட்ரில்லியன் டாலர் என்ற அளவில் முதலிடத்தில் இருக்க தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது என தெரிவித்தார். உலகின் மிக முக்கிய புத்தொழில் நகரமாக தமிழகத்தை கட்டமைக்க முயற்சி எடுத்து வருகிறோம் என்றார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட முதல்வர், இதில் 50 சதவீதம் பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் தொழில் நிறுவனங்கள் தான் அதிகம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். தொழில்துறையில் தமிழக அரசின் வளர்ச்சி குறித்து பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தர வரிசையை பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை இருப்பதை முதல்வர் புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டினார். பெண்கள் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது என்றார்.

சமூக நீதியை செயல்படுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் பாரபட்சமில்லாமல் தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்றார். துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சி செயல்படுத்தப்பட்டு வருவதுடன், உலகளாவிய தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் தமிழகத்தில் கோவையில் இந்த புத் தொழில் மாநாடு நடைபெற்று கொண்டுள்ளது என்றார்.

இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் கண்காட்சி அரங்கத்தில் 21 நாடுகளைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இங்கே அரங்கங்கள் அமைத்துள்ளனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *