சென்னை, ஏப். 7-
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு மாசுவை தடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று சிபிஎம் வேட்பாளர் சுந்தரராஜ் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜ் மணலி 20, 22 ஆகிய வார்டுகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக சின்ன சேக்காடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் சின்னசேக்காடு, அப்துல்கலாம் நகர், மல்லி நகர், காந்தி நகர், சந்திரம்மா கோயில் தெரு, வேதாச்சலம் தெரு, பார்த்தசாரதி தெரு, வேதகிரி தெரு, மாணிக்கவாசகம் தெரு, பெருமாள் கோயில் தெரு, மணலி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்றும், வணிகர்களிடமும் வாக்கு சேகரித்தார்.
சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து, மலர் தூவி, சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது அவர் பேசுகையில், வடசென்னை எப்போதும் வஞ்சிக்கப்படுகிறது என்ற உணர்வு இருக்கும். ஆனால் திமுக ஆட்சி அமைந்தவுடன் கடந்த 5 ஆண்டுகளில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சாலை அமைக்க, குடிநீர் வசதி, கல்வி, மருத்துவ வசதி, விளையாட்டுத் துறை, மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளத்தைப் போக்குவதற்காக கொசஸ்தலை ஆற்றைச் சீர்ப்படுத்துவதற்கு, முகத்துவாரத்தை, எண்ணூர் முகத்துவாரத்தைச் சீர்ப்படுத்துவதற்கு, நூலகங்கள் அமைப்பதற்கு என 2,600 கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் மகளிர் உரிமைத் தொகை, தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் எனத் தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது.
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மணலி பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுக யாருக்காக செயல்படுகிறது, அவர்கள் மக்களுக்காக இருக்கிறார்களா அல்லது தேர்தலுக்கு மட்டும் வந்து செல்லக்கூடியவர்களா என்பதையெல்லாம் சிந்தித்து இந்த பகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும். பட்டா கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு பட்டா கிடைக்க நட்வடிக்கை எடுப்பேன்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு மாசுவை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். எனவே எனக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தேர்தல் பணிக்குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கிழக்கு பகுதி செயலாளர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மேற்கு பகுதிச் செயலாளர் வை.ம.அருள்தாசன், மத்திய பகுதிச் செயலாளர் ஏ.வி.ஆறுமுகம், தொகுதி பொறுப்பாளர் எஸ்.மோகன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தொகுதி பொறுப்பாளர் டி.கே.சண்முகம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மாதரம்மாகனி பரூக், பி.வி.முருகன், (காங்கிரஸ்), விசிக மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், மாமன்ற உறுப்பினர் அ.கீர்த்தி, முன்னாள் கவுன்சிலர் கரிகால சோழன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தொகுதி பொறுப்பாளர் டி.கே.சண்முகம், மணலி பொறுப்பாளர் எஸ்.ராணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் டி.பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.