வருகின்ற மே 4-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தத் தருணத்தைப் போற்றும் வகையில், கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர் UMT ராஜா அவர்கள், ஒரு வித்தியாசமான ஓவியத்தை வரைந்துள்ளார்.
இந்த ஓவியத்தில், மே 1-ம் தேதி வரவுள்ள உழைப்பாளர் தினத்தையும், மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளையும் மையப்படுத்தி, உழைப்பாளர் தின சிலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்த அரசியல் தலைவர்கள், மக்களின் தீர்ப்பிற்காகக் காத்திருக்கும் நிலையை, வானில் பறக்கும் ‘காத்தாடி’யாகக் கலைஞர் சித்தரித்துள்ளார்.
காத்தாடியின் நூலில் அரசியல் தலைவர்களின் ஓவியங்களும், அவர்களது சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. “மே 4 அன்று வெற்றிக் கொடி பறக்கப்போவது யாரு? என்பதைத் தீர்மானிக்கும் இந்தத் தருணத்தை, உழைப்பின் அடையாளமான சிலையோடு இணைத்து,
வெற்றிக் காத்தாடி யாருடைய கையில் இருக்கப்போகிறது?” என்ற கேள்வியை இந்த ஓவியம் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. அரசியல் என்பது மக்களின் உழைப்பை மதிக்கும் களமாக இருக்க வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்தும் இந்தப் படைப்பு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.