67 ஆண்டுகால காத்திருப்புக்கு பின் சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் புதிய திருத்தேர் வீதியுலா வந்தது. சிங்காரவேலவர், தியாகராஜர் பஞ்சமூர்த்திகளுடன் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நவநீதேஸ்வர சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் அலங்காரத்தில் ஸ்ரீ விநாயகர், சிங்காரவேலவர், தியாகராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புதிய திருத்தேரில் எழுந்தருளினர். சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டதும், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது.
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் காட்சி | பெண்கள், குழந்தைகள் பக்தி பரவசம்]*
“ஆரூரா தியாகேசா”, “முருகனுக்கு அரோகரா”, “கந்தனுக்கு அரோகரா” என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். சிவ வாத்தியங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேர் கோயிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
67 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் கண் குளிர .
சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் மரச்சிற்ப வேலைப்பாடுகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட இந்த திருத்தேர், 67 ஆண்டுகளுக்குப் பிறகு வீதியுலா வந்தது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வீதிகள் தோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தேரோட்டத்தை காண நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாகை செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி