நாகை செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி
நாகை அருகே பழமை வாய்ந்த ராராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி; வீடுகள் தோறும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மனமுருகி வழிபாடு*
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்த ராராந்திமங்கலம் கிழக்கில் தஞ்சை மறை மாவட்டம், காரையூர் மறை வட்டத்திற்கு உட்பட்ட பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் ஆலயத்தில் நவநாள் மன்றாற்று நடைப்பெற்று வந்தது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி இன்று கோலாகலமாக நடைப்பெற்றது.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித சம்மனசு, புனித செபஸ்தியார், புனித ஆரோக்கிய மாதா ஆகியோர் எழுந்தருளினா். முன்னதாக பங்கு தந்தை அந்தோணி தலைமையில் கூட்டு பாடல், திருப்பலி நடைப்பெற்றது. பின்னர் தேரினை புனிதம் செய்து தொடங்கி வைத்தார். ஆலய வளாகத்தில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க தேர் பவனி தொடங்கியது. பவனியானது கண்கவர் வான வேடிக்கைகளோடு முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
வழியில் சம்மனசு பந்தலில் ஆகாயத்தில் இருந்து மாலையிடும் நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது. தேர் பவனியின் போது ஒவ்வொரு வீடுகளிலும் கிருஷ்தவர்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தி தேரினை வரவேற்று புனித சம்மனசு, புனித செபஸ்தியர், புனித ஆரோக்கிய மாதாவிற்கு மாலை அணிவித்து சாம்பிராணி காட்டி மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
திருவிழாவில் பொதுமக்கள் அனைவருக்கும் விடிய , விடிய உணவு வழங்கப்பட்டது. விழாவினை ராராந்திமங்கலம் கிழக்கு இறை மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.