கோவை: பார்க் கல்விக் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட “ஜீரோ ஜி 2026” என்ற இரண்டு நாள் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார விழா கோவை கனியூர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று 30-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் கலாச்சார போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விழாவின் முதல் நாளான மே 5-ம் தேதி பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் நடிகை, பாடகி மடோனா செபாஸ்டியன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் திரைப்பட நடிகர் ரியோ ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கல்வி, தேர்ச்சி விகிதம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களை கவுரவித்தனர்.
பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி பேசுகையில், முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு சிந்தனையின்படி, “பார்க் முன்னாள் மாணவர்களின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு தொழில்முனைவோர் உருவாக வேண்டும்” என்பது எங்கள் இலக்கு என்றார்.
மேலும், இந்த ஆண்டு முதல் “நம்பிகை கல்வி உதவித்தொகை” மற்றும் “சக்தி கல்வி உதவித்தொகை” ஆகிய இரண்டு புதிய கல்வி உதவித்திட்டங்களும் வழங்கப்பட உள்ளன. இதனை ஏற்பாடு செய்த ஜீரோ ஜி 2026 ஏற்பாட்டுக்குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
இதில், பெற்றோர்களை இழந்து ஆசிரமங்களில் வசிக்கும் மாணவர்கள் உயர்கல்வி தொடர உதவும் வகையிலான “நம்பிகை” கல்வி உதவித்தொகை இந்த ஆண்டு ஏ.ஐ மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரமான உயர்கல்வி பெற உதவும் வகையில் “சக்தி கல்வி உதவித்தொகை” கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு வழங்கப்பட்டது.