தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு.
தாராபுரம்,
தாராபுரம் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தாராபுரம் வட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, தாராபுரம் டி.எஸ்.பி., எல்.சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி.என்.பழனியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் என்.சரவணக் குமார் ஆகியோர் தாராபுரம் பகுதியில் உள்ள 270 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் குறைபாடு உள்ள 21 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அவசர சேவை (108 ஆம்புலன்ஸ்) வாகனப் பணியாளர்கள் மூலம் அவசரகால சிகிச்சை குறித்த விழிப்புணர்வு மற்றும் தாராபுரம் தீயணைப்புத் துறை அலுவலகம் சார்பில் தீர்த்தடுப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இம் முகாமில் தாராபுரம் காவல் ஆய்வாளர் எம்.ராமச்சந்திரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.நந்தகோபால், வட்டாரப் போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.