எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடகால், தெற்கு தெரு, கிழக்குத் தெரு மற்றும் வடக்கு வடகால் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு காவி நிறமாக மாறியதால், பொதுமக்கள் முழுமையாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தையே நம்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள், ஆத்திரமடைந்து காலி குடங்களுடன் சீர்காழி – திருமுல்லைவாசல் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்கக் கோரி சாலையில் அமர்ந்து தொடர் முழக்கங்களையும் எழுப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் வருமாறு கேட்டுக்கொண்டார். அதிகாரியின் உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி – திருமுல்லைவாசல் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.