கும்பகோணம்: –
காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், வேளாண்துறை அமைச்சர் ஆர். வினோத் ரவியை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். வினோத் ரவி, பதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் அரசு துறை அலுவலர்கள் என பல தரப்பினர் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்,
அதன்படி மே, 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்திற்கு சென்ற காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர், அமைச்சர் வினோத் ரவியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டா விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை நேரடியாக எடுத்துரைத்ததாகவும் கூறினார்.
விவசாயிகள் கடன்சுமையில் சிக்கி தவித்து வருவதால் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், 10 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்பவர்களுக்கும் குறைந்தது 50 சதவீதம் கடன் தள்ளுபடி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறினார், மேலும், நெல் மற்றும் கரும்பு போன்ற முக்கிய பயிர்களுக்கு உற்பத்தி செலவுகளை கருத்தில் கொண்டு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதுடன், டெல்டா விவசாய பணிகளை முன்னிட்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்றும், கல்லணையில் வரும் காவிரி நீரை முதலமைச்சர் நேரில் திறந்து விட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்ததாக கூறினார்.
இதற்கிடையில், விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக தில்லியில் மத்திய வேளாண் அமைச்சருடன் மாநில பிரதிநிதிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பு மூலம் டெல்டா பகுதி விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இக்கோரிக்கைகள் மீது அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.