கோவை சூலூர் கல்லம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியும், அவரின் கொடூரக் கொலையும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் துரிதமாகக் கைது செய்த காவல்துறைக்கு நன்றிகள். அதே வேளையில், இனி ஒருபோதும் எந்தவொரு மிருகத்திற்கும் இதுபோன்ற எண்ணமே வராத அளவிற்கு, இந்தக் குற்றவாளிகளுக்குக் கடுமையான, மிக உயர்ந்தபட்ச தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் எனத் தமிழக முதல்வர் மாண்புமிகு விஜய் அவர்களுக்குச் பொதுமக்கள் சார்பாகக் கோரிக்கை வைக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் ஆத்மாவிற்குத் தனது கலை வழியே கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் குனியமுத்தூர் யு.எம்.டி ராஜா.
வழக்கமான தூரிகைகளைப் பயன்படுத்தாமல், முற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த ஓவியத்தை அவர் உருவாக்கியுள்ளார். எரியும் மெழுகுதிரியிலிருந்து வெளிவரும் கரும் புகையை ஒரு தளத்தில் படியவிட்டு, பின்னர் ஒரு சிறிய மூங்கில் குச்சியைக் கொண்டு அந்தப் புகையை மெல்ல மெல்லச் சுரண்டி இந்த ஓவியத்தை வடிவமைத்துள்ளார்.
புகைக்கு நடுவே அந்தச் சிறுமியின் முகம் உருக்கமாக வரையப்பட்டுள்ளது.
அதோடு, “மலரும் போதே மரணம்” மற்றும் “கண்ணீர் அஞ்சலி பாப்பா” என்ற வாசகங்களும் அந்த மூங்கில் குச்சியால் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மறைந்த சிறுமிக்குத் தீபமேற்றி, புகையின் வழியே அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த வித்தியாசமான கலைப்படைப்பு காண்போரின் கண்களைக் குளமாக்குகிறது.