நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் விளை நிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு அகரக்கொந்தகை முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி சாமிநாதன் தலைமை தாங்கினார்.
இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் முஹம்மது சாதிக் கலந்து கொண்டு பேசினார். அப்போது இயற்கை விவசாயம் மற்றும் உரப்பயன்பாடு குறித்து விரிவாக எடுத்து சொல்லி பயனடையலாம் எனவும் மண் பரிசோதனையின் அடிப்படையில் உரங்கள் மற்றும் பிற வேளாண் இடுபொருட்களை சமநிலையாகப் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சமச்சீர் உரப்பயன்பாடு, பசுந்தாள் உரம் மற்றும் இயற்கை உயிரியல் தயாரிப்புகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் திறனை மேம்படுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிகள் மற்றும் வயல்வெளி செயல்விளக்கங்கள் மூலம் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், விவசாயிகளின் வயல்களில் பசுந்தாள் உரம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் வேளாண் இடுபொருட்களின் சரியான பயன்பாடு குறித்த செயல் விளக்கங்களை ஏற்பாடு செய்து, மண் வளத்தை மேம்படுத்துவதோடு இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் துணை தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன், உதவி தோட்டக்கலை அலுவலர் அய்யப்பன் மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.