டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் பாரத ரத்னா பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் உருவ சிலை முன்பு ஜீன்14 இரத்ததான தினத்தை முன்னிட்டு தன்னார்வ குருதிக்கொடையாளரக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நாற்பத்தொரு முறை குருதிக் கொடை அளித்த மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். பதினெட்டு முறை குருதிக்கொடை வழங்கியடீசல் பணிமனை மேற்பார்வையாளர், ஆர்.நாகநாதன், பதினான்கு முறை குருதிக்கொடை அளித்த டீசல் சீனியர் தொழில்நுட்பர் எம்.ராஜதுரை, இருபத்தாறு முறை குருதிக் கொடை அளித்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் தன்னலமற்ற மனிதநேய பணியினை பாராட்டி அரிமா பழனி, மேனாள் ரயில்வே சுவாமிநாதன், முத்துகுமார் உள்ளிட்டோர் பயனாடை அணிவித்து பாராட்டினர்.
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம்
பேசுகையில், தன்னார்வ குருதிக் கொடையாளர்கள், உடன் பிறவா சகோதர, சகோதரிகள், பெரியோர்கள் என அறிமுகமில்லாத ஒருவரின் உயிரைக் காக்கும் உயரிய மனிதநேயப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை பாராட்டுகிறோம்.
ஒவ்வொரு குருதிக் கொடையும் பல குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், பல உயிர்களுக்கு மறுவாழ்வையும் அளிக்கிறது. மனிதநேயம் இன்னும் உயிருடன் உள்ளது என்பதை உங்கள் சேவை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
உங்கள் அறப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
மேலும் பொது மக்களுக்கு குருதிக்கொடை வழங்க வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வே ண்டும்.உடல் எடை குறைந்தது 45–50 கிலோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.உடல்நலம் நன்றாக இருந்து, காய்ச்சல் அல்லது தொற்றுநோய் இல்லாமல் இருக்க வேண்டும்.இரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு இயல்பான அளவில் இருக்க வேண்டும்.இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவுக்கு மேல் இருக்க வேண்டும்.இரத்ததானம் செய்யும் நாளில் போதுமான உணவு உட்கொண்டு, போதிய தண்ணீர் அருந்தியிருக்க வேண்டும்.சமீபத்தில் பெரிய அறுவை சிகிச்சை, பச்சைக்குத்து அல்லது சில மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டிருந்தால், மருத்துவரின் ஆலோசனை அவசியம்.கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தற்காலிகமாக இரத்ததானம் செய்யக் கூடாது.முந்தைய முழு இரத்ததானத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி பொதுவாக சுமார் 3 மாதங்கள் அல்லது மருத்துவர் வழிகாட்டுதலின்படி பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
இரத்ததானத்திற்கு முன் மருத்துவர் அல்லது இரத்த வங்கி அதிகாரி மேற்கொள்ளும் உடல்நலப் பரிசோதனையில் தகுதியானவர் என உறுதி செய்யப்பட வேண்டும்.இரத்ததானம் செய்யப்பட்ட ஒரு யூனிட் முழு இரத்தம், இரத்த வங்கியில் சிறப்பு கருவிகள் (சென்ட்ரிஃபியூஜ்) மூலம் அதன் கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது.
சிவப்பு இரத்த அணுக்கள் – இரத்த சோகை, அதிக இரத்த இழப்பு மற்றும் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.பிளாஸ்மா – தீக்காயம், கல்லீரல் நோய் மற்றும் இரத்த உறைதல் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படுகிறது.இரத்தத் தட்டணுக்கள் – புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள், டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்த உறைதல் பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியமானது.கிரையோபிரெசிபிட்டேட் – இரத்த உறைதலுக்குத் தேவையான சிறப்பு புரதங்கள் கொண்ட பகுதி; சில அரிய இரத்தக் கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதனால், ஒரு நபர் வழங்கும் இரத்ததானம் பல உயிர்களுக்கு உதவ முடிகிறது என்றார்