திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தக வெளியீட்டு விழா
குழந்தைகளின் படைப்பாற்றலை மீட்க ஹாபி திருவிழா-2026 சென்னையில் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெரியோர்க்கு படைப்பாற்றல், கற்றல் மற்றும் மகிழ்ச்சியின் உலகுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியாக ஹாபி திருவிழாவை காந்தி உலக மையம் நிறுவனர் ராஜேஷ் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடத்தினார். ஹாபி திருவிழா ஒவ்வொருவரின் பொழுதுபோக்குகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழகத்தில் உள்ள சேகரிப்புக் கலைஞர்கள் அவரவரது சேகரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர். தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தொடங்கி வைத்து,
“ஹாபி மேக்ஸ் யு -ஹேப்பி”, திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் நூலினை நடிகை சுஜிதா, நடிகர் மிர்ச்சி சிவா முன்னிலையில் வெளியிட்டார். விழாவில் திருச்சி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் அரிய தபால் தலைகள், பழமையான நாணயங்கள், உலக நாடுகளின் வங்கிப் பணத்தாள்கள், தீப்பெட்டி அட்டைகள், சுடுமண் பொருட்களை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், உலகப் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி, சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், புதை உயிரி படிமங்கள் சேகரிப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் அவர் தம் சேகரிப்பினை காட்சிப்படுத்தி விளக்கினர்.
மேலும், பலர் பழைய சைக்கிள்கள், மரத்தால் செய்யப்பட்ட பாரம்பரிய மாட்டு வண்டி, வெள்ளிப் பொருட்கள், தொலைக்காட்சி பெட்டி, வானொலி பெட்டி, சுவர் கடிகாரங்கள், கைகடிகாரங்கள், அளவைகள், பிரபல நிறுவனங்களின் மினியேச்சர் சிலைகள், பழங்கால புழங்கு பொருட்கள், பண்டைய இசைக்கருவிகள், பழமையான ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு அரிய சேகரிப்புகளை காட்சிப் படுத்தினர்.
மேலும் ஓவியப் போட்டிகள், கலைப் பயிற்சிகள், விளையாட்டுகள் ஆகியவை நடைபெற்றன. கிளாசிக் கிச்சன் சுரேஷ், விளையாட்டு வீரர்கள், சேகரிப்பாளர் கள், கலைஞர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பொதுமக்கள் நிகழ்ச்சியில் பெரும் திரளாக பங்கேற்றனர்.