கோவை
சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவை சுங்கம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து டிரினிட்டி பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
டிரினிட்டி பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சினிமா பாடல்களை சாலை பாதுகாப்பு கருத்துகளுக்கு ஏற்ப மறு உருவாக்கம் செய்து பாடியும், அதற்கேற்ப நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், நகைச்சுவை கலந்த நிகழ்ச்சிகள் மூலம் சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியத்தை வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துரைத்தனர்.
வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது, இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய சாலை பாதுகாப்பு விதிகளை மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
வழக்கமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் போல இல்லாமல், பாடல், நடனம் மற்றும் நகைச்சுவை மூலம் மாணவர்கள் சாலை பாதுகாப்பு கருத்துகளை எடுத்துரைத்தது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிகழ்வில் டிரினிட்டி பள்ளியின் தாளாளர் அருட்தந்தை மார்ட்டின் மற்றும் பள்ளியின் முதல்வர் டாக்டர் தனலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டிரினிட்டி பள்ளி மாணவர்களின் இந்த முயற்சி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எளிமையான முறையில் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தது குறிப்பிடத்தக்கது.