மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

சீர்காழி அடுத்த இளையமதுக்கூடம் அருள்மிகு சௌந்தர நாயகி அம்பாள் சமேத பிர்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இளையமதுக்கூடம் கிராமத்தில் பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த சௌந்தர நாயகி அம்பாள் சமேத பிர்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 22ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. அதனை அடுத்து வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களில் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அகோரம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாய என கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர்.