தேனி அருகே அரசு சிப்காட் உணவுப் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேனி, ஜூன் 27:
தேனி மாவட்டம், திண்டுக்கல்–குமுளி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.183) வழித்தடத்தில் அமைந்துள்ள உப்பாரப்பட்டி, தப்புக்குண்டு மற்றும் பூமலைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய அரசு சிப்காட் உணவுப் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உணவுப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள், சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், திட்டப் பணிகளை விரைந்து முடித்து, தொழில் முதலீடுகளை ஈர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாதன், சிப்காட் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்.