தருமபுரி – ஆகஸ்ட் 12
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் வருகின்ற 14-ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் நாகராசன் தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வரும் 14-ம் தேதி தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, கழக அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதாகவும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் அதிமுக சார்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.