தேனி, ஜூன் 29: தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி வளாகத்தில் மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சி. யோகஸ்ரீ மற்றும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வி.பி. மணிமாறன் முன்னிலை வகித்தனர்.
இந்த சிறப்பு முகாமில் புதிய சொத்து வரி நிர்ணயம், புதிய குடிநீர் இணைப்பு, சொத்து வரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம், தொழில் வரி, மனைப்பிரிவு அங்கீகாரம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மொத்தம் 10 வகையான கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
முகாமில் கலந்து கொண்ட பேரூராட்சி மன்றத் தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி கூறுகையில், “பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும்” என்றார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் ஜெயக்குமார், அலுவலக உதவியாளர் முரளி உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.